சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்துக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில், நேற்று காலை முதல் தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் புறப்பட்டு சென்றன. மேலும் கடைகள் அனைத்தும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இதன் விளைவாக நோய் தொற்றின் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதையடுத்து, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.அதன்படி, ஊரடங்கு நேற்று காலை 6 மணியுடன் முடிந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. எனினும் கொரோனா பரவலை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை வரும் 19ம்தேதி வரை காலை 6மணி வரை நீட்டித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது. இந்த தளர்வுகளில் முக்கியமாக தமிழகம்- புதுச்சேரிக்கு இடையிலான பேருந்து சேவை தொடங்கியது. குறிப்பாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் 2 மாதங்களுக்கு பின்பு நேற்று காலை முதல் புறப்பட்டு சென்றன. இதேபோன்று அண்டை மாவட்டங்களில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.எனினும் மாநிலங்களுக்கு இடையிலான அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கான தடை நீடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் கடைகள் அனைத்தும் தற்போது வரை இரவு 8 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டு வந்தது. நேற்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை நாட்கள் இரவு 8 மணி வரை இருந்த கடை திறப்பு, தற்போது கூடுதலாக ஒரு மணி நேரம் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.அது போன்று ஓட்டல்கள், பேக்கரிகள், தேனீர் கடைகளும் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.எனவே, கடைகளில் அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடும் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.சென்னை மெட்ரோல் ரயில்கள் நேற்று காலை 5.30 முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டது. இதனால் மெட்ரோ ரயில் பயணிகள் அதிகாலை முதல் உற்சாகமாக ரயில்களில் பயணித்தனர். கூடுதல் தளர்வுகள் அளித்தாலும் அதை பொதுமக்கள் முறையாக கடைபிடித்தால் தான் கொரோனா தொற்றை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பதால் விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.* எதற்கெல்லாம் தடை நீடிப்புதமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோன்று தியேட்டர்கள், நீச்சல் குளங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. பொதுமக்கள் பங்கேற்கும் சமுதாய அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கும் இன்னும் தடை தொடர்கிறது. புதுச்சேரியில் வரும் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அது போல் தமிழகத்திலும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த, அறிவிப்புகள் அடுத்த ஊரடங்கு தளர்வுகளில் நிறைவேற்றப்படுமா என்றும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.* 364 பஸ்கள் இயக்கம்தமிழகம்-புதுச்சேரி இடையே 70 நாட்களுக்கு பிறகு நேற்று அரசு பஸ்களின் சேவை தொடங்கியது. இதையடுத்து சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட போக்குவரத்துக்கழகங்களின் சார்பில் 364 பஸ்கள் தமிழகம்-புதுச்சேரி இடையே நேற்று இயக்கப்பட்டன. இதேபோல் ஏராளமான தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டன. வரும் நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். …