சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களை பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் கடந்த 1989ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அப்போதைய முதலமைச்சர் கலைஞரால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்குப் பிறகு, கடந்த 2010ம் ஆண்டு மீண்டும் கலைஞரால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சட்டபூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட்டு வருகிறது.தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருத்தியமைத்து, அதன் தலைவராக எஸ். பீட்டர் அல்போன்சை நியமித்து கடந்த மாதம் 28ம் தேதி உத்தரவிட்டுள்ளார். தற்போது தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு டாக்டர் மஸ்தான் துணைத் தலைவராகவும், ஏ.பி.தமீம் அன்சாரி, ஹர்பஜன் சிங் சூரி, மன்ஞ்ஜித் சிங் நய்யர், பைரேலால் ஜெயின், டாக்டர் டான் பாஸ்கோ, அருட்சகோதரர் இருதயம், பிக்கு மவுரியார் புத்தா உள்ளிட்டோரை உறுப்பினர்களாகவும் நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். …