திருத்தணி: ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக சென்னைக்கு செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்பு காவல்படை எஸ்ஐ குமார் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை திருத்தணி அருகே பூனிமாங்காடு கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து தமிழக பதிவெண் கொண்ட காரை மறித்தபோது நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் விரட்டிச்சென்று அந்த காரை சுற்றிவளைத்து பிடித்து சோதனை நடத்தியபோது, சுமார் 3 அடி நீளம்கொண்ட 52 செம்மர கட்டைகள் இருந்தது. காரில் இருந்து ஒரு டன் செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து செம்மர கட்டை கடத்திவந்ததாக சென்னை மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த முருகன் (31), கனிமுத்தால்லா (30), ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்த சின்னப்பா (40) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை திருத்தணி வனச்சரகர் அருள், வனவர் சுந்தரம் ஆகியோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். செம்மர கட்டை கடத்தல் பின்னணியில் யார், யார் உள்ளார்கள் என்றும் விசாரிக்கின்றனர்….