சென்னை: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு உறுப்பினர்கள் நியமனம் செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13ஆம் நாளன்று அப்போதைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்குப் பிறகு, கடந்த 2010 ஆம் ஆண்டு மீண்டும் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 2010 இன்படி, சட்டபூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திருத்தியமைத்து, அதன் தலைவராக திரு. எஸ். பீட்டர் அல்போன்ஸ் அவர்களை நியமித்து 28.06.2021 அன்று உத்தரவிட்டுள்ளார்கள்.தற்போது தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு டாக்டர் மஸ்தான் அவர்களை துணைத் தலைவராகவும், திரு. ஏ.பி. தமீம் அன்சாரி, திரு. ஹர்பஜன் சிங் சூரி, திரு. மன்ஞ்ஜித் சிங் நய்யர், திரு. யு. சுதிர் லோதா. திரு. பைரேலால் ஜெயின். டாக்டர் எல். டான் பாஸ்கோ. அருட்சகோதரர் டாக்டர் எம் இருதயம். பிக்கு மௌரியார் புத்தா உள்ளிட்டோரை உறுப்பினர்களாகவும் நியமித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்….