Saturday, October 5, 2024
Home » சென்னிமலையில் நிலவும் குடிநீர் தேவையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்

சென்னிமலையில் நிலவும் குடிநீர் தேவையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்

by kannappan

*அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் உத்தரவுஈரோடு : ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் நிலவும் குடிநீர்  தேவையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற அனைத்து துறை அதிகாரிகளுக்கும்  செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டம்,  சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் புதுப்பாளையம் ஜெ.ஜெ.நகரில் மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில்  சிமென்ட் கான்கிரீட் தடுப்பணை கட்டுமான பணி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி  நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை  தாங்கினார். இதில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து  கொண்டு தடுப்பணை கட்டுமான பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம்,  பனியம்பள்ளியில் 14வது நிதிக்குழு மானியத்தின் கீழ் புதுப்பாளையம்  ஜெ.ஜெ.நகரில் உள்ள திறந்த வெளி கிணற்றில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 842  மதிப்பீட்டில் மின்மோட்டார் மற்றும் உதிரிபாகங்கள் பொருத்தி குடிநீர்  விநியோகிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முகாசிபிடாரியூர்  ஊராட்சியில் தியாகிகுமரன் நகர், திருமுகமலர்ந்தபுரம் ஆகிய பகுதிகளில்  மழையினால் பாதிப்படைந்த இடங்களை பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு  மக்களுக்கு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நிவாரண உதவிகளை வழங்கினார்.ஆய்வு கூட்டம்: ஈரோடு  மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து துறைகளின்  வளர்ச்சி திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று  நடந்தது. கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமை  தாங்கினார். ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம்  முகாசிபிடாரியூர், எல்லைகிராமம், கொடுமுணல் போன்ற பகுதிகளில் போர்க்கால  அடிப்படையில் குடிநீர் தேவையை நிறைவேற்ற அலுவலர்களுக்கு அமைச்சர்  உத்தரவிட்டார். இந்த கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது: காங்கயம்  சட்டமன்றத்திற்கு உட்பட்ட சென்னிமலை ஒன்றியத்தின் ஒரு சில பகுதிகள் வறட்சி  பகுதிகளாக உள்ளது. அப்பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், சீரான  குடிநீர் விநியோகம் குறித்து முன் மாதிரியாக ஏற்கனவே ஆய்வு கூட்டம்  நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று 2வது ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. காங்கயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னிமலை ஒன்றியம், பேரூராட்சிகளில்  ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்கள், குடிநீர்  திட்டப்பணிகளுக்கு கூடுதலான அடிப்படை வசதிகள், தடையற்ற குடிநீர் வழங்க  புதிய குடிநீர் திட்டங்களை உருவாக்குவதற்கு நீராதாரம் உள்ள பகுதிகளை  கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னிமலை ஊராட்சி  ஒன்றிய பகுதிகளில் குடிநீர் தேவைக்கு உடனடி தீர்வு காணப்படும்.  இக்கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்கள் தமிழக முதல்வரின் கவனத்திற்கு  கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் மாவட்ட  நிர்வாகத்தின் மூலம் சரிசெய்யக்கூடிய கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண  அறிவுறுத்தியுள்ளேன். ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டப்பணிகளுக்கு  கூடுதல் நிதியை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்  தடையில்லா மின்சாரம் வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது  ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அனைத்து துறைகளின்  சார்பில் தெரிவிக்கப்பட்ட மக்கள் நல திட்டங்கள் குறித்த கருத்துகளை  உடனடியாக செயல்படுத்தும் வகையில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அனைத்துத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஏதுவாக, நிதிநிலை  அறிக்கையில் அறிவிக்க வேண்டிய திட்டங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை  அலுவலர்கள் மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை  மேற்கொள்ளப்படும்.ஆய்வு கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளை  தொடர்ந்து கண்காணித்து, குடிநீர் பிரச்னை இல்லை என்ற சூழ்நிலையை  உருவாக்குவதற்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் அனைத்து  நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து நடைமுறையில் உள்ள திட்டங்களை  எவ்வித தங்கு தடையுமின்றி மக்களை சென்றடையும் வகையில் அனைத்து துறை  அலுவலர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில்,  ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), திட்ட இயக்குநர் பிரதிக்  தயாள், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஏகம் ஜெ சிங், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய  தலைவர் காயத்ரி, ஈரோடு ஆர்டிஓ பிரேமலதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  உமாசங்கர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கனகராஜ், இணை இயக்குநர்  (வேளாண்மை) அசோக், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) தமிழ்செல்வி,  சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிபாக்கியம், கணபதிசுந்தரம்  உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்….

You may also like

Leave a Comment

16 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi