திருப்பத்தூர் : திருப்பத்தூர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஏராளமான மக்கள் அங்கு திரண்டு ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையின் பின்புற பகுதியில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு லிங்க வடிவிலான முருகர் கோயிலும் உள்ளது. ஏலகிரி மலை பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அத்தனாவூர் ஏரி நிரம்பி, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. கடந்த 6 மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தினால் வறண்டு கிடந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில், கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக நேற்று நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஞாயிறு விடுமுறையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீரை வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். தொடர்ந்து, ஆர்வம் அதிகரித்து நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். ஊரடங்கு காரணமாக ஜலகாம்பாறை சாலையில் தடுப்பு வேலிகள் அமைத்து, யாரும் உள்ளே நுழையக் கூடாது என்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், நேற்று விடுமுறை காரணமாக ஏராளமான மக்கள் அங்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது….