Sunday, October 6, 2024
Home » மினி ஸ்டேடியம் அமைப்பதே எனது முதல் இலக்கு; விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் எனது பணி இருக்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

மினி ஸ்டேடியம் அமைப்பதே எனது முதல் இலக்கு; விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் எனது பணி இருக்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

by kannappan

சென்னை: மினி ஸ்டேடியம் அமைப்பதே எனது முதல் இலக்கு என்றும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் எனது பணி இருக்கும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் சார்பில் பங்கேற்க உள்ள மாணவ, மாணவிகளுடன் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், நேரு உள்விளையாட்டரங்கத்தில் அவர்களை இன்று காலை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்.   இந்த சந்திப்புக்கு பின்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: நேரு விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினேன். அவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினேன். மூத்த அமைச்சர்களின் வழிகாட்டுதலின் பேரில் எனது பணிகளை என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முயற்சி செய்வேன். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை கொடுத்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் 234 தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம்.  அதுவே எனது முதல் இலக்கு. அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் எனது பணிகள் இருக்கும். ‘முதலமைச்சர் தங்கப் கோப்பை’ என்ற திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், சிலம்பாட்டம், கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை சேர்த்து முதலமைச்சர் தங்கப் கோப்பைக்கான போட்டிகள் ஜனவரி மாதம் முதல் தொடங்குகிறது.  ‘பீச் ஒலிம்பிக்ஸ்’ போட்டி நடத்துவதற்கான முயற்சி எடுத்துள்ளோம். ஏடிபி டென்னிஸ் போட்டியும் கொண்டு வருவதற்கான முயற்சியும் எடுத்து வருகிறோம். மாற்றுதிறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு சங்கங்களும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பணிகளைத் தான் செய்து வருகிறார்கள். அவர்களுடன் நாங்களும் ஒருங்கிணைந்து விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பணிகளில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். …

You may also like

Leave a Comment

16 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi