Wednesday, October 2, 2024
Home » காலையில் ஆசிரியர் மாலையில் விவசாயி

காலையில் ஆசிரியர் மாலையில் விவசாயி

by kannappan

கல்விப் பணியுடன் உழவுப் பணிகுமரி மாவட்ட சரகத்தில் சுமார் 6500 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி நடக்கிறது. மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்தாலும், மகசூல் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ற படி திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட திருப்பதிசாரம் 3, திருப்பதிசாரம் 5 ரக நெல் அதிக அளவு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ரக நெல்பயிர்கள் மழை உள்பட பேரிடர் காலங்களில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நிற்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பதிசாரம் 5 ரக நெல் கன்னிப்பூவுக்கும், திருப்பதிசாரம் 3 ரக நெல் கும்பப்பூவிற்கும் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாய நிலங்கள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூலம் நீர் ஆதாரம் பெற்று வருகிறது. அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நாகர்கோவில் அருகுவிளையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் நெல்சாகுபடியும், தென்னை, மா சாகுபடியும் செய்து வருகிறார். ‘ஆசிரியர் தொழிலுடன், விவசாயம் செய்யும்போது மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கிறது’ எனக் கூறியுள்ளார். இது குறித்து ஆசிரியரும், விவசாயியுமான அமல்ராஜிடம் பேசினோம். ‘‘குமரி மாவட்டத்திற்கு நாஞ்சில் நாடு என பெயர் உண்டு. எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என காட்சி அளிக்கும். அந்த அளவிற்கு வயல்பரப்புகள் இருந்துவந்தது. தற்போது வயல்பரப்புகள் குறைந்துள்ளது. இருப்பினும் மகசூல் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. நான் நாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில்  ஆசிரியராக 31 வருடமாக பணியாற்றி வருகிறேன். நான் சிறுவயதாக இருக்கும் போது எனது தாத்தாவிற்கு ஒரு வயல் இருந்தது. அந்த வயலில் நெல் சாகுபடி செய்யும்போது, எனது தாத்தாவுடன் செல்வேன். அப்போது இருந்த வயல்களில் நாமும் நெல்சாகுபடி செய்யவேண்டும் என எனக்கு ஆசையாக இருந்தது. குடும்பசூழல் காரணமாக அந்த வயல் கைமாறிப் போனது. இதனால் மிகவும் மனம் வருந்தினேன். இதனால் நாம் வயல் வாங்கி நெல் சாகுபடி செய்யவேண்டும் என தீராத ஆசை இருந்தது. பின்னர் படித்து ஆசிரியர் பணிக்கு வந்தபிறகு, சிறுகசிறுக பணம் சேர்த்து வைத்து விவசாய நிலங்கள் வாங்கினேன். தற்போது நண்பர்களின் வயல்கள், எனது வயல் என சேர்த்து மொத்தம் 10 ஏக்கர் வயல் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 20 வருடமாக நெல் சாகுபடி செய்து வருகிறேன். இதனை தவிர 3 ஏக்கரில் தென்னந்தோப்பும் உள்ளது. தென்னையில் ஊடுபயிராக மா மரங்கள் வைத்துள்ளேன். தென்னை, மாவில் இருந்து வருமானம் கிடைத்து வருகிறது. ஆனால் குமரி மாவட்ட காலநிலை மாறும்போது, மா மரங்களில் மகசூல் கிடைப்பது அரிதாகி வருகிறது. கடந்த 20 வருடமாக வயல்களில் நெல்சாகுபடி செய்து வருவதன் மூலம் லாபம் என்பது இல்லாமல் இருந்து வந்தது. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது, சொந்தமாக சில வேலைகள் செய்தால், லாபம் கிடைக்கும் என எனக்குள் தோன்றியது. இதனால் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய நேரம் போக, காலை மாலையில்  வயல்களில் முழுவீச்சாக வேலை செய்வேன். மேலும் விடுமுறை நாட்களில் அதிகாலை யிலேயே வயல் வேலைகளை ஆரம்பித்து விடுவேன். காலை முதல் மாலை வரை வேலை செய்வேன். இதனால் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைத்துவருகின்றது. கடந்த காலங்களில் மிகுந்த சிரமத்துடன்  நெல்சாகுபடி செய்து வந்தேன். தனியார் ஆலையினர் வந்து கொள்முதல் செய்ததால், போதிய அளவு பணம் கிடைக்காமல் இருந்தது. தற்போது அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் செய்வதுடன், போதிய பணம் கிடைப்பதால், நெல் விவசாயத்தில் லாபம் கிடைத்துவருகிறது. ஒரு ஏக்கர் வயல் பரப்பில் நெல் சாகுபடி செய்வதற்கு தொழிலாளர்கள் சம்பளம், உரம் என மொத்தம் ரூ.22 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவு ஆகிறது. அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் கொடுப்பதால், அனைத்து செலவுகள் போக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. இந்த லாபம் குறைவு என்றாலும், கடந்த காலத்தை நினைக்கும்போது, தற்போது வருமானம்தான் வருகிறது. கடந்த காலங்களில் வயல்களில் தொழிலாளர்களை கொண்டு நடவுசெய்து வந்தோம். தற்போது இயந்திரங்களைக் கொண்டு நடவுச் செய்வதால், வயல்களில் நடவு பயிர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன், மகசூலும் அதிகமாக கிடைக்கிறது. நெல் வயல்களில் அறுவடைக் காலங்களில் காலநிலை கைகொடுக்கும் பட்சத்தில் வருமானம் கிடைக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தற்போது படித்த இளைஞர்கள் விவசாயப் பணிகளில் கால்பதித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆசிரியர் பணியுடன், விவசாயப் பணியும் நான் செய்துவருவது எனக்கு அகமகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார். தொடர்புக்கு– ஆசிரியர் அமல்ராஜ்94422 77529தொகுப்பு: ச.உமாசங்கர்  படங்கள்: எம்.மணிகண்டன்

You may also like

Leave a Comment

3 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi