Monday, October 7, 2024
Home » அயனாவரத்தில் விபரீதம் பிரியாணி கேட்ட மனைவியை எரித்து கொன்ற கணவன்: எரியும் நிலையிலும் கணவரை கட்டிபிடித்து தண்டனை கொடுத்த மனைவி

அயனாவரத்தில் விபரீதம் பிரியாணி கேட்ட மனைவியை எரித்து கொன்ற கணவன்: எரியும் நிலையிலும் கணவரை கட்டிபிடித்து தண்டனை கொடுத்த மனைவி

by kannappan

சென்னை: அயனாவரத்தில் பிரியாணி கேட்ட மனைவியை எரித்து கொலை செய்த கணவரை, உடல் தீபிடித்து எரியும் நிலையிலும் கணவரை கட்டிபிடித்து அவருக்கு தண்டனை கொடுத்தார். இதனால் பலத்த தீக்காயம் அடைந்த, 2 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மனைவி பரிதாபமாக இறந்தார். மேலும், கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை அயனாவரம் தாகூர் நகர் 3வது தெருவில் வசிப்பவர் கருணாகரன் (75). ஓய்வுபெற்ற ஐசிஎப் ஊழியரான இவருக்கு திருமணமாகி பத்மாவதி (66) என்ற மனைவியும், மகேஸ்வரி (50), குமார் (46), ஷகிலா(44), கார்த்திக் (40) என 4 பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகள் திருமணமாகி தனி, தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கருணாகரன், பத்மாவதி ஆகியோர் தனியாக வசித்து வருகின்றனர். அடிக்கடி தனது மகள் மற்றும் மகன் ஆகியோர் வீட்டிற்கு செல்லும் கருணாகரன்-பத்மாவதி தம்பதியினர் சிறிது நாட்கள் அங்கு தங்கி விட்டு மீண்டும் அயனாவரத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும், கருணாகரன், பத்மாவதி ஆகியோர் வயது முதிர்வின் காரணமாகவும், தனியாக வசித்து வந்ததால் கடந்த சில மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டனர். இதனால், பிள்ளைகள் பெற்றோரை வீட்டில் தங்க வைத்தாலும், அவர்களுடன் சண்டை போட்டு விட்டு வீட்டிற்கு வந்து விடுவார்களாம். மேலும், மனநல பிரச்னைக்காக 2 பேரும் சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். இதேபோல் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், இதனால் 2பேரும் அடிக்கடி பேசாமலும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கருணாகரன் தனது மனைவி பத்மாவதிக்கு சரியாக சாப்பாடு வாங்கி கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. நேற்று  முன்தினம் இரவு கருணாகரன் மட்டும் பிரியாணி வாங்கி வந்து தனியாக சாப்பிட்டுள்ளார். அப்போது பத்மாவதி தனது கணவரிடம் தனக்கும் பிரியாணி வேண்டும் என கேட்டுள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கருணாகரன் உடனே வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை பத்மாவதி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடனே பத்மாவதி தீயுடன் ஓடிவந்து கணவர் கருணாகரனை கட்டி பிடித்து கொண்டதால் இருவரும் தீயில் எரிந்து காயமடைந்தனர். பின்னர், இவர்களது வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தீயில் எரிவதை கண்டு பதறிபோய் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அயனாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அயனாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீக்காயமடைந்த 2 பேரையும் மீட்டு ஒரே ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பத்மாவதி 50% தீக்காயங்களுடனும், கருணாகரன் 70% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பத்மாவதி நேற்று மதியம் 1 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கருணாகரனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம், குறித்து அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பல ஆண்டுகாலமாக ஒன்றாக வாழ்ந்த தம்பதியினர் வயது முதிர்வின் காரணமாக சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கோபத்தில் எடுத்த ஒரு தவறான முடிவால் மனைவி உயிரிழந்த நிலையில் கணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அயனாவரம்  பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

You may also like

Leave a Comment

3 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi