ஆலந்தூர்: அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மழைநீர் கால்வாய் பணிகளை முடிக்காத அதிகாரிகளுக்கு மெமோ கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மழையினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பது குறித்த அனைத்து துறை அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்தாய்வு கூட்டம் ஆலந்தூர் 12வது மண்டல மாநகாட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். மாநகராட்சி கண்காணிப்பு அதிகாரி நந்தகோபால், ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், மண்டல உதவி ஆணையர் பாஸ்கரன், செயற்பொறியாளர் முருகவேல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடந்த 2 மாதங்களாக வரும் மழைநீர் கால்வாய் பாதாள சாக்கடை திட்ட பணிகள் போன்றவை குறித்து மாநகராட்சி, மெட்ரோ குடிநீர் வாரியம், மின்துறை, நெடுஞ்சாலை, காவல்துறை போன்ற அதிகாரியிடம் கேட்டறிந்தார். பின்னர் கவுன்சிலர்களின் கருத்துகளை கேட்டார். அப்போது, கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளையும், தங்கள் பகுதியில் நடைபெறும் பணிகள் குறித்தும் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘‘மழையினால் அதிகமாக பாதிக்கப்படும் மணப்பாக்கம், முகலிவாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள், பாதாள சாக்கடை பணிகள் போன்றவற்றை விரைவில் முடிக்க வேண்டும். பல இடங்களில் பகுதிகளில் தூர்வாரப்படாமல் இருப்பதாக புகார்கள் வருகின்றன. அப்படி தூர்வாரும் பணியை செய்யாமல் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அதிகாரிகளுக்கு மெமோ கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாய்ந்த மின்கம்பங்கள், மரங்கள் போன்றவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என துறை அதிகாரிகள் ஒன்று சேர்ந்து மழைக்கால பணிகளில் ஈடுபட வேண்டும்’’என்றார்….