சென்னை: பொது விநியோக திட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் இணைந்து தமிழ்நாட்டில் அரிசி கடத்தலே இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் சிவில் சப்ளை சிஐடி போலீஸ் அதிகாரிகளுடன் அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை 12,637 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 12,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 128 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 90,122 குவிண்டால் அரிசி கையகப்படுத்தப்பட்டு 2,607 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொது விநியோக திட்ட பணிகளை மேற்கொண்டு வரும் அரசு அதிகாரிகள், பொது விநியோக திட்ட கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், அரிசி அரவை ஆலைகளின் உரிமையாளர்கள், அரிசி கிடங்கு பாதுகாப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் அரிசியை கடைகளுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்கள், அரிசி பெறும் மற்றும் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் இணைந்து தமிழ்நாட்டில் அரிசி கடத்தலே இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்றார்….