குலசேகரம் : கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதான தொழில் ரப்பர் விவசாயம். அரசு ரப்பர் கழகம் மற்றும் தனியாருக்கு சொந்தமாக ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. குறிப்பாக கல்குளம், திருவட்டார், விளவங்கோடு ஆகிய தாலுகாக்களில் ரப்பர் விவசாயம் அதிகம் காணப்படுகிறது.ரப்பர் பால் வடித்தல் மற்றும் அது தொடர்பான தொழில்களை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். பொதுவாக ரப்பர் பால் வடித்தலுக்கு அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்கள் உகந்த காலம்.ஆனால் இந்த காலத்தில் பருவமழையின் தாக்கமும் அதிகம் என்பதால் ரப்பர் தொழில் பாதிப்படைவதையும் தவிர்க்க முடியாது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் கடுமையான தாக்கத்தால் ரப்பர் பால் வடிக்கும் தொழில் அடியோடு முடங்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழையின் பாதிப்பு சற்று இருந்தாலும் ஓரளவு ரப்பர் உற்பத்தி இருந்தது. ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் ரப்பர் மரங்கள் அதிகமுள்ள மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை, சாரல் மழை என தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ரப்பர் பால் வடிக்கும் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. மழை பெய்தாலும் தொழிலை தொடர்வதற்காக ரப்பர் மரத்தை சுற்றி பிளாஸ்டிக் குடை போன்ற அமைப்பை விவசாயிகள் வைத்துள்ளனர். ஆனால் கனமழை பெய்யும் பட்சத்தில் இந்த திட்டம் பலனளிப்பதில்லை.தற்போது முதிர் ரப்பர் மரங்களை வெட்டி அகற்றிவிட்டு புதிய ரப்பர் மரக்கன்றுகளை நடும் பணி நடந்து வந்தது. வெட்டப்படும் ரப்பர் மரங்கள் கேரளாவில் பெரும்பாவூர் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொழிலும் தற்போது முடங்கியுள்ளது. பருவமழைக்கு செங்கல் சூளைகளும் தப்பவில்லை. ஆரல்வாய்மொழி ,பரளியாறு, கோதையாறு, குழித்துறை தாமிரபரணியாற்றின் கரையோரங்களில் அமைந்துள்ள செங்கல் சூளைகளிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ளூர், வெளியூர், வடமாநில தொழிலாளர்கள் என ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது….