சென்னை,: புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை முடிந்ததையடுத்து சென்னை காசிமேட்டில் நேற்று மீன் வாங்க கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம் கிலோ ரூ. 1100, வவ்வால் ரூ. 800, சங்கரா ரூ. 400, இறால் ரூ. 350க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகமாக இருந்த போதிலும் விலையை பொருட்படுத்தாமல் மீன்களை அசைவ பிரியர்கள் வாங்கி சென்றனர். புரட்டாசி மாதம் கடந்த மாதம் 18ம் தேதி பிறந்தது. இந்த மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். பெரும்பாலான இந்துக்கள், இந்த மாதத்தில் விரதம் இருப்பார்கள். அதனால், வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். இதனால் மீன், மட்டன், சிக்கன் விற்பனை மந்தமாக நடைபெற்று வந்தது. மேலும் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கத்தை விட விற்பனை வெகுவாக குறைந்திருந்தது. இந்த நிலையில் புரட்டாசி மாதத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளும் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதனால் நேற்று காலை முதல் சென்னை காசிமேடு மீன்பி்டி துறைமுகத்தில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று கரை திரும்பியதால் திருக்கை மீன்கள், ஊடான், வஞ்சிரம், சூறை, உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது.மக்கள் போட்டி போட்டுக்கொண்டு விரும்பிய மீன்களை வாங்கி சென்றனர். வஞ்சிரம் கிலோ ரூ. 1100 வரை விற்பனையானது. வவ்வால் ரூ. 800, பாறை ரூ. 600க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சங்கரா ரூ. 400 திருக்கை ரூ. 350 நெத்திலி ரூ. 200 சூறை ரூ. 500 கடம்பா ரூ. 400 இறால் ரூ. 350 என்றும் விற்பனையானது. மீன்விலை வழக்கத்தை விட அதிகமாக இருந்த போதிலும், விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை அதிக அளவில் வாங்கிச் சென்றனர். இதனால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்….