மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 1.85 லட்சம் கனஅடியாக நீடிக்கும் நிலையில், மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1.95 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 6வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், இருமாநில எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை விநாடிக்கு 1.75 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. மாலை நிலவரப்படி 1.85 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலையும் நீர்வரத்து 1.85 லட்சம் கனஅடியாக நீடிக்கிறது. அங்குள்ள மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது.இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 8 மணிக்கு 1.70 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, 9.30 மணி அளவில் 2 லட்சம் கனஅடியானது. மாலையில் 1.95 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலையும் நீர்வரத்து 1.95 லட்சம் கனஅடியாக நீடிக்கிறது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிக்கும் நிலையில், அணைக்கு வரும் நீர் முழுமையாக ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக 21 ஆயிரத்து 500 கனஅடி, உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 1 லட்சத்து 73 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.அணையின் நீர்மட்டம் கடந்த 12ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து 6வது நாளாக இன்றும் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர் கிறது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து 1.95 லட்சம் கனஅடியாக இருப்பதால் மேட்டூர் அணையின் வலது மற்றும் இடது கரையில் நீர்வளத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உபரி நீர் போக்கியில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அப்பகுதி வெள்ளக்காடாக காணப்படுகிறது. …