தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வடுககுடி கிராமத்தைச் சேர்ந்த வாழை விவசாயி மதியழகன். சுமார் 50 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளார். கொரோனா காலத்தில் வாழைத்தார்கள் தேங்கியதால் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து 4வது முறையாக நேற்று இரண்டரை டன் வாழைத்தார்களை தனது சொந்த வாகனத்தில் ஏற்றி வந்து தஞ்சை மேம்பால பகுதியில் உள்ள பார்வையற்றோர் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு இலவசமாக வாழைப்பழங்களை அவர் வழங்கினார். தற்பொழுது வாழை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை வெட்டு கூலிக்கு கூட போதுமானதாக இல்லை. தமிழக அரசு சத்துணவு திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு வாழைப்பழங்களை வழங்க வேண்டும். அவ்வாறு வாழைப்பழங்களை சத்துணவில் வழங்க தமிழக அரசு முன்வந்தால் ஒரு வாழைப்பழத்தை ஒரு ரூபாய்க்கு அரசுக்கு வழங்க வாழை விவசாயிகள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்….