சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவி சத்தியா(20) என்பவரை காதலித்துள்ளார்.இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், இவர்கள் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்த போது தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் மாணவி சத்தியாவை ரயில் முன்பு சதிஷ் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சதிஷ் தள்ளிவிட்டதால் ரயிலில் சிக்கிய சத்தியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார்; மாணவி சத்தியாவின் உடலை மீட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய இளைஞர் சதீஷை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. …