சென்னை : வயதான பெற்றோரை கவனிக்காத மகனுக்கு பெற்றோர் எழுதி வைத்த சொத்துக்களின் பத்திரங்களை ரத்து செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற விமான படை அதிகாரி ஒருவர் வயதான தன்னையும், தன்னுடைய மனைவியையும் தங்களுடைய மூத்த மகன் கவனிக்காததால் அவருக்கு தானமாக எழுதி வைத்த சொத்து பத்திரங்கள் ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தார். தனக்கு இடுப்பில் 4 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருப்பதையும், தன்னுடைய மனைவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதையும் மனுவில் சுட்டிக்காட்டிய அவர் இது தொடர்பாக உதவி கோரிய போது ஆஸ்திரேலியாவில் உள்ள தங்கள் மூத்த மகன் பதில் அளிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். தங்களை கடைசி காலத்தில் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்ததால் தங்களது சொத்துக்களை மூத்த மகனின் பெயருக்கு எழுதி வைத்ததாகவும் ஆனால், உறுதியளித்தபடி நடக்காததால் தான பத்திரங்களை ரத்து செய்ய அனுமதி கோரி இருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா பெற்றோர் மற்றும் மூத்தோர் பராமரிப்பு மற்றும் நலச்சட்ட 2017-ன் படி மூத்த மகனின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்களை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர அனுமதி வழங்கினார். தந்தைக்கு மகனாற்றும் உதவி திருக்குறளில் இவனை மகனாக பெற தந்தை பாக்கியம் செய்திருக்க வேண்டும் என பிறர் பாராட்டும்படி மகன் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டி இருக்கும் நீதிபதி அது நம்முடைய சமூகத்தின் அடிப்படை பண்புகளை உணர்த்துவதாக கூறியுள்ளார். ஆனால், சமூகத்தின் இந்த பண்பு எப்படி வேகமாக அழிந்து வருவதற்கு இந்த வழக்கு சான்றாக இருப்பதாக நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். …