Saturday, September 21, 2024
Home » முழுக்க முழுக்க ஜனநாயக அடிப்படையில் செயல்படக்கூடிய கட்சி செயல்பாடுகளை முடக்கவே என்ஐஏ சோதனை: கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

முழுக்க முழுக்க ஜனநாயக அடிப்படையில் செயல்படக்கூடிய கட்சி செயல்பாடுகளை முடக்கவே என்ஐஏ சோதனை: கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

by kannappan

சென்னை: முழுக்க முழுக்க ஜனநாயக அடிப்படையில் செயல்படக்கூடிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் விதத்திலேயே என்.ஐ.ஏ. சோதனை நடந்துள்ளது என்று பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அளித்த பேட்டி: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. தனது போலியான தேடுதல் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில செயலாளர் நஜ்மா பேகம் இல்லம், ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் பரக்கத்துல்லா வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு அவரையும் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அதேபோல், கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் அஸ்ரப் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். முழுக்க முழுக்க ஜனநாயக அடிப்படையில் செயல்படக்கூடிய எஸ்.டி.பி.ஐ.கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் விதத்திலேயே என்.ஐ.ஏ.வின் இத்தகைய செயல்பாடுகள் அமைந்துள்ளன.ஒருபோதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியை இத்தகைய அடக்குமுறைகளை கொண்டு ஒடுக்க முடியாது என்பதை பாஜ அரசு புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றிய பாஜ அரசு தன் கைப்பாவை அரசு நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்தி நாட்டில் அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றுகிறது. பாப்புலர் பிரண்ட் அலுவலகம், மாநில துணைத் தலைவர் வீடு  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) சோதனை மேற்கொண்டுள்ளது. பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மக்கள் விரோத செயல்பாடுகளை அம்பலப்படுத்தும் அனைவரையும் அச்சுறுத்த  என்.ஐ.ஏ, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்தி அச்சுறுத்த நினைக்கிறது. பாப்புலர் பிரண்ட் மக்கள் இயக்கத்தை அச்சுறுத்தவோ, முடக்கவோ முடியாது. மக்கள் விரோத, நாசகார செயல்களில் ஈடுபட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சுதந்திரமாக செயல்படுகிறது. அவர்களைப்பற்றி எந்த விசாரணை அமைப்புகளும் விசாரிப்பதற்கு தயாராக இல்லை. இந்நிலையில் மக்கள் சேவையை தங்களுடைய லட்சியமாக கொண்டு செயல்படும் பாப்புலர் பிரண்ட் மீது வஞ்சகத்தோடு செயல்படும் பாஜ அரசின் எந்த நிகழ்வும் அராஜகமானது.இத்தகைய ஜனநாயக விரோத பாஜ அரசின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப்: பின்னர், இது குறித்து பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டல தலைவர் பக்கீர் முகமது நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா ஒரு ஜனநாயக அமைப்பு. இந்திய அளவில் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் குறிப்பாக பாஜ, ஆர் எஸ் எஸ் அமைப்புகள் செய்யும் மக்கள் விரோத செயல்பாடுகளை உடனுக்குடன் மக்களுடைய மன்றத்திலே நாங்கள் எடுத்துரைக்கிறோம். இதனால் பாப்புலர் ஃப்ரன்டை தொடர்ந்து குறி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா காலகட்டத்தில் இந்திய அளவில் 8,000க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மக்களுடைய உடல்களை மதத்திற்கு அப்பாற்பட்டு நாங்கள் நல்லடக்கம் செய்தோம். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இஸ்லாமிய அமைப்பு என்பதை தாண்டி ஒட்டுமொத்த இந்திய அமைப்பாக உருமாறி இருக்கிறது. இது ஆர்எஸ்எஸ் பாஜவிற்கு கண்ணை உறுத்துகிறது. தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. இது போன்ற மிரட்டல்களுக்கு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்றும் அடிபணியாது சட்டரீதியாக நாங்கள் இதனை எதிர்கொள்வோம். இவ்வாறு தெரிவித்தார்….

You may also like

Leave a Comment

seven − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi