கூடலூர் : கூடலூர் அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை வீட்டை இடித்து தள்ளியது. இதில், 2 பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிசோலை மாங்கா மரம் பகுதியில் வசிப்பவர் செரியோல். கணவனை இழந்த இவர், பக்கத்து வீட்டில் தனியாக வசிக்கும் மற்றொரு பெண் துணையுடன் இரவில் வீட்டில் தங்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை இப்பகுதிக்கு வந்த காட்டுயானை இவரது வீட்டை இடித்து சேதப்படுத்தியது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீப்பந்தங்கள் எடுத்து வந்து சத்தமிட்டு யானையை விரட்டி இருவரையும் காப்பாற்றினர்.இதேபோல், தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சி கொல்லி பகுதிகளும் காட்டு யானையின் நடமாட்டம் தொடர்வதால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அருகிலுள்ள முதுமலை வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் வரும் காட்டு யானை விநாயகனின் நடமாட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதன் நடமாட்டம் துவங்கியுள்ளது. குடியிருப்புகளை ஒட்டி வரும் காட்டு யானை அங்குள்ள தென்னை, வாழை மற்றும் பாக்கு மரங்களையும் சேதப்படுத்தி வருகிறது. காட்டுயானை விநாயகனின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்….