கீழக்கரை : கீழக்கரை அருகே 3 டன் மீன்கள் செத்து கரை ஒதுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கீழக்கரை அருகே பெரியபட்டினம் கடலோரத்தில் நேற்று காலை ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கரை ஒதுங்கிய சுமார் மூன்று டன் மீன்களை கூடைகளில் சேகரித்து பள்ளம் தோண்டி புதைத்தனர். இது குறித்து பெரியபட்டினம் மீனவர் செய்யது இபுராம்சா கூறியதாவது, ‘‘கடந்த சில நாட்களாக நடுக்கடலில் கடல் நீர் நிறம் மாறி பச்சையாக வருகிறது. கடலின் உள்பகுதி நாற்றம் வீசுகிறது. பச்சை நிறத்தண்ணீர் வரத்து அதிகரிப்பால் அந்த தண்ணீர் கரைக்கு வரும் போது கடலில் வாழும் மீன்கள் செத்து கரை ஒதுங்கியது.கடந்த ஐந்து ஆண்டுகளாக செப்டம்பர் மாதத்தில் செத்து கரை ஒதுங்குவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது தூத்துக்குடி பகுதியில் இருந்து வரக்கூடிய கடல் நீரால் இந்த மீன்கள் செத்து ஒதுங்குவது தெரிய வருகிறது. அந்த மீன்களின் துர்நாற்றத்தால் மீனவர்கள் மீன்களை சேகரித்து பள்ளம் தோண்டி புதைத்தனர், இந்த பச்சை நிற தண்ணீர் வரத்து இருக்கும் வரை கடலில் வாழக்கூடிய மீன்கள் செத்து கரை ஒதுங்கும். இதற்கு நிரந்தர தீர்வு காண மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்’’என்றார்….