சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரெட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாசாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஒவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2013ன் படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.9,98,300 அபராதமும், கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.10,95,410 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரெட்டி ஒட்டிய 451 நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு ரூ.1,38,100 அபராதமும் மொத்தம் ரூ.22,22,810 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நகரை தூய்மையாக்க முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும். மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….