புதுடெல்லி: புதிய கலால் கொள்கை வழக்கில், 8 பேருக்கு சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. புதிய கலால் கொள்கையில் முறைகேடு விவகாரத்தில், டெல்லி துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது என சிசோடியா நேற்று குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில்கூறுகையில், ‘‘புதிய கலால் கொள்கை வழக்கு தொடர்பாக எனக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. என்னை கண்டுபிடிக்க முடியவில்லையா மோடி அவர்களே..? நான் தலைநகரில் சுதந்திரமாகத்தான் சுற்றித் திரிகிறேன். நான் எங்கு வர வேண்டும் என்று சொல்லுங்கள்’’ என்றார். ஆனால், சிசோடியாவின் இந்த குற்றச்சாட்டை சிபிஐ மறுத்தது. சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ‘‘புதிய கலால் கொள்கை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 8 தனிநபர்களுக்கு மட்டுமே லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிசோடியாவுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படவில்லை. அரசு பதவியில் இருப்பவர்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசிடம் தெரிவிக்காமல் வெளிநாடு செல்ல முடியாது என்பதால் அவர்களுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை” என விளக்கம் அளித்துள்ளனர். அடுத்த பிரதமர் கெஜ்ரிவால்தான்இதற்கிடையே, டெல்லி துணை முதல்வர் சிசோடியா நேற்று அளித்த பேட்டியில், ‘‘2024 மக்களவை தேர்தலில் மோடிக்கு மாற்றாக ஒரே தலைவராக ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலைத்தான் மக்கள் கருதுகிறார்கள். அடுத்த பிரதமர் கெஜ்ரிவால்தான். அவரை தடுப்பதற்காகத்தான் பாஜ, சிபிஐ, துணை நிலை ஆளுநர், டெல்லி தலைமை செயலாளர் என அனைவரும் ஒன்றிணைந்து வேலை செய்கின்றனர். இல்லாவிட்டால் 2024 தேர்தல் பாஜவின் கையை விட்டு போய் விடும். கெஜ்ரிவால் பிரதமர் ஆக வேண்டியது தனிநபரின் லட்சியம் அல்ல, ஒட்டுமொத்த நாடே அதை விரும்புகிறது’’ என்றார்.மற்றொரு ஊழல்டெல்லி போக்குவரத்துறை சார்பில் 1,000 ஏசி தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ தனது முதற்கட்ட விசாரணையை நேற்று தொடங்கியுள்ளது.இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….