புதுடெல்லி: டெல்லி உட்பட நாட்டில் உள்ள அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும், சுதந்திர போராட்ட தியாகிகள், தேச தலைவர்கள், அந்தந்த பகுதியின் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய பெயர் சூட்ட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஒன்றிய அரசின் சார்பில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. டெல்லி உட்பட 23 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அவைகள் அமைந்துள்ள நகரின் பேரால் மட்டுமே அழைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இவற்றை தனித்தனியாக அடையாளப்படுத்த, எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு வெவ்வேறு புதிய பெயர்களை சூட்ட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக புதிய பெயர்களை பரிந்துரைக்குமாறு அனைத்து எய்ம்ஸ் நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, பெரும்பாலான எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகங்கள் புதிய பெயரை பரிந்துரைத்துள்ளதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறி உள்ளனர். அவர்கள் கூறுகையில், ‘‘சுதந்திர போராட்ட வீரர்கள், வரலாற்று நிகழ்வுகள், உள்ளூர் தலைவர்கள், நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அடையாளம் காணும் வகையில் பெயர்கள் வைக்கப்படும்’’ என்றனர்….