குளச்சல்: குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட பைபர் கட்டுமர மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்து வருகிறது. இந்த தடை காலம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் குளச்சல் பகுதி விசைப்படகு மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தயாராகி வருகின்றனர். ஆனால் பைபர் படகுகள் வழக்கம்போல் மீன்பிடித்து வருகின்றன.இருப்பினும் கடந்த ஒருவாரமாக குளச்சல் பகுதியில் சூறைக்காற்று மற்றும் மழையால் பெரும்பாலான பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன் வரத்தும் குறைந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை காற்று சற்று குறைந்ததால் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களது வலைகளில் ஏராளமான நெத்திலி மீன்கள் கிடைத்தன. அவற்றை மகிழ்ச்சியுடன் ஏலக்கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். வழக்கமாக ஒரு குட்டை நெத்திலி மீன் ரூ.2,000 முதல் 2,500 வரை ஏலம் போகும். ஆனால் நேற்று மீன் வரத்து அதிகம் இருந்ததால் ஒரு குட்டை நெத்திலி மீன் ரூ.500 முதல் ரூ.700 வரை மட்டுமே விலைபோனது. அவற்றை மீன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்….