சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு இதுவரை 2,11,905 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் சான்றிதழ் பதிவேற்றத்திற்கு இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். உள்பட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான பதிவும் கடந்த மாதம் 22ம் தேதி ஆரம்பமானது.சிபிஎஸ்இ தேர்வு முடிவு கடந்த 22ம் தேதி வெளியானதை தொடர்ந்து, கூடுதலாக 5 நாட்கள் விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. தேர்வு முடிவு வெளியான அன்றைய தினமும், மறுநாளும் சிபிஎஸ்இ மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டினர். அதற்கு முந்தைய நாட்களில் தினமும் 1000 பேர் பதிவு செய்த நிலையில், தேர்வு முடிவு வெளியானதற்கு பிறகு தினமும் 3 ஆயிரத்துக்கு மேல் விண்ணப்பித்தனர். அதன்படி, பொறியியல் படிப்புகளில் உள்ள 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 இடங்களுக்கு, இதுவரை 2,11,905 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு, இதுவரை 4,07,045 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பப்பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே அறிவித்தபடி, நேற்றோடு நிறைவடைந்து விட்டது. மேலும், பொறியியல் படிப்புக்கு மட்டும் இன்று (29ம் தேதி) சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் பணம் செலுத்தலாம். NATA தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை பி.ஆர்ச் படிப்பிற்கு தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்….