காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தொலைதூர பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் புதுச்சேரி கல்வித்துறையானது, கிராமங்களில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர ஒரு ரூபாய் பேருந்தை அரசு இயக்கியது. இது, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைந்து மீண்டும் பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகிறது. ஆனால் ஒரு ரூபாய் பேருந்துகள் காரைக்கால் முழுவதும் இயக்கப்படவில்லை. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குறித்த நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதியுற்று வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.2 நாட்களுக்கு முன் விழிதியூர் கிராமத்தில் இருந்து காரைக்கால் செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்து இல்லாததால் லோடு வேனில் ஏறி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் நடைபெறும் இந்த போக்கை மாவட்ட நிர்வாகமும், புதுவை அரசும் கண்டும் காணாமல் இருப்பதாக பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பலர் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களில் அவசர கதிக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இன்னும் சிலர் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்படாததால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், மாணவர்களுக்கு `ஒரு ரூபாய் பேருந்து’ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கொரோனாவை காரணம் காட்டி பேருந்துகள் நிறுத்தப்பட்டன. காரைக்கால் மாவட்டத்திலேயே புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி அரசின் ஒரு ரூபாய் பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….