சிட்னி: டி20 ஆட்டங்கள் அதிகரித்து உள்ளதால் வீரர்கள் தொடர்ந்து ஓய்வில்லாமல் விளையாட வேண்டி உள்ளன. அதனால் வீரர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தவிக்கின்றனர். எனவே வீரர்கள் அடிக்கடி ஓய்வு எடுக்கின்றனர். அதனால் டி20 ஆட்டங்கள் அதிகரித்த பிறகு பல நாடுகளில் டெஸ்ட் அணிக்கு தனியாக கேப்டனும், ஒருநாள், டி20 அணிகளுக்கு தனியாக கேப்டனும் இருக்கின்றனர். பல நாடுகளில் முன்னணி வீரர்களை தவிர மற்றவர்களுக்கு 3 அணிகளிலும் இடம் கிடைப்பதில்லை. இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் திடீரென ஓய்வு பெற்றுள்ளார். வெறும் 31வயதான அவர் ‘ஒரே நேரத்தில் 3 வகையான போட்டிகளிலும் கவனம் செலுத்துவது சிரமாக உள்ளது. அதனால் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன்’ என்று அறிவித்து விட்டார். பென் ஸ்டோக்கின் முடிவை, வாசிம் அக்ரம்(பாகிஸ்தான்) உட்பட பல முன்னாள் வீரர்கள் பலரும் வரவேற்று உள்ளனர். கூடவே ‘டி20, ஒருநாள் ஆட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் வீரர்களுக்கு மட்டுமல்ல, கிரிக்கெட் விளையாட்டுக்கும் பிரச்னை’ என்று விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில் ஆஸ்திரலேியா வீரர் உஸ்மான் கவாஜா, ‘ இப்போது டி20 கிரிக்கெட் ஆட்டங்கள் உலகம் முழுவதும் நடக்கின்றன. அது சிறந்த பொழுது போக்காக இருப்பதால் அதை எல்லோரும் விரும்புகிறார்கள். அதேபோல் டெஸ்ட் போட்டிகள் கிரிக்கெட்டின் உச்சம். அதை ஒன்றும் செய்ய முடியாது. இந்த 2க்கும் அடுத்த 3வது இடத்தில்தான் ஒருநாள் கிரிக்கெட் உள்ளது. ஆனாலும் ஒருநாள் உலக கோப்பை இன்னும் இருக்கிறது. அதைப் பார்க்க, ரசிக்க எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் அதைத் தவிர ஒருநாள் கிரிக்கெட்டில் எனக்கு ஈடுபாடு கிடையாது. என்னுடைய கருத்து என்னவென்றால் ஒருநாள் கிரிக்கெட் மெல்ல செத்துக் கொண்டு இருக்கிறது. அது அழியும் நிலையில் உள்ளது.இது எனது சொந்த கருத்தாக இருந்தாலும். பல வீரர்களுக்கு இது ஒத்த கருத்தாக இருப்பதை பார்க்கிறேன்.’ என்று கூறியுள்ளாார்….