வருசநாடு: வருசநாடு அருகே அரசரடி, வெள்ளிமலை, ராஜீவ்நகர் இந்திரா நகர், உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு செல்லும் தார்ச்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தேனி மாவட்டம், மஞ்சனூத்து செக்போஸ்ட் முதல் வெள்ளிமலை வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூர சாலை உள்ளது. இந்த சாலை தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சாலை போட்டு பல ஆண்டுகளாகியும் புதுப்பிக்கப்படவில்லை. இதனால் சல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும், சில இடங்களில் மெகா பள்ளத்துடன் சாலை உள்ளது. இதனால் அரசரடி, வெள்ளிமலை, இந்திராநகர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் மலைக்கிராம மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். அப்பகுதிமக்கள் நலன் கருதி, இந்த சாலையை சீரமைக்க தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்க எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து மலைக்கிராம மக்கள் சிலர் கூறுகையில், ‘‘சாலை சேதமடைந்துள்ளதால் அவதிக்குள்ளாகி வருகிறோம். தார்ச்சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்….