கொழும்பு : பாகிஸ்தானைத் தொடர்ந்து மற்றொரு அண்டை நாடான இலங்கையில் கடும் நெருக்கடிக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைத்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை அரசியலில் இருந்து ராஜபக்சே குடும்பமே ஒழித்துக்கட்டப்பட்டுவிட்ட நிலையில், இலங்கையில் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், டீசல் மற்றும் பெட்ரோல் சில்லறை விலைகளை அந்நாட்டு மதிப்பில் தலா ரூ. 20 குறைத்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் 5 முறை விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை விற்பனை இரவு 10 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்திய மதிப்பில் ஆக்டேன் 92 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.89க்கும் ஆக்டேன் 95 ரக பெட்ரோல் விலை ரூ. 119.87க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சூப்பர் டீசல் விலை லிட்டருக்கு ரூ.113.21க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் கேஸ் நிரப்பும் நிலையங்களில் போதிய அளவுக்கு இருப்பு இல்லாததால் மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை இன்றும் நீடிக்கிறது. …