விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள தேவங்குடி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அப்பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்கத்தின் மூலம் இயங்கும் நியாய விலை கடை அமைந்துள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அரசால் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.இந்நிலையில் இந்த நியாய விலை கட்டிடம் மிகவும் பழுதடைந்த காரணத்தினால் அதே பகுதியில் உள்ள கிராம நூலகக் கட்டிடத்தில் கடந்த சில மாதங்களாக நியாய விலை கடை இயங்கி வருகிறது. இதனால் நூலகத்தில் பயிலும் வாசகர்கள் நூலகத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டிடத்திற்கு வரும் வழி முறையான பராமரிப்பு இன்றி சேறும் சகதியுமாக இருப்பதால் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் அப்பகுதியில் நடந்து செல்லும்போது வழுக்கி விழுந்து விபத்து ஏற்படும் அபாயத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி விரைவில் நியாய விலை கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும். அதுவரை நூலகத்திற்கு செல்லும் பாதையையும் சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்….