புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரசு பணியாளர் நல கூட்டமைப்பினர் கவர்னர் மாளிகையை திடீரென நேற்று முற்றுகையிட்டனர். அப்போது போலீசுடன் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இதில் கவர்னர், முதல்வர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கவர்னர் தமிழிசை வருகையின்போது, உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாப்பு அதிகாரி (சப்-இன்ஸ்பெக்டர்) ராஜசேகர், முதல்வர் ரங்கசாமியை நெட்டி தள்ளி விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இது பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியது. இதனை பெரிதுப்படுத்த தேவையில்லை என என்ஆர்.காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனாலும் இப்பிரச்னை ஓயாமல் இருந்தது. ஆனாலும், முதல்வரின் ஆதரவாளர்களான அரசு பணியாளர் நல கூட்டமைப்பினர் தலைவர் சரவணன் தலைமையில் 35க்கும் மேற்பட்டோர் பாரதி பூங்கா அருகில் நேற்று திரண்டனர். அங்குள்ள பேரிகார்டுகளை தள்ளிபோட்டுவிட்டு திபுதிபுவென தடைகளை மீறி எகிறிகுதித்து கவர்னர் மாளிகை முன்பு வந்து நுழைவாயிலில் முற்றுகைட்டனர். முதல்வரை அவமதித்த காவல்துறை அதிகாரி மீது கவர்னர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர். கவர்னரை சந்தித்து முறையிட வேண்டுமென கோஷமிட்டனர். போலீஸ் படையினர் அவர்களை சட்டையை பிடித்து இழுத்து அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர். ஆனால், போராட்டக்காரர்கள் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். ஒருகட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்குழுவுக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் அளித்தால், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து முற்றுகை கைவிடப்பட்டது. ஆயுதப்படைக்கு மாற்றம்: இதற்கிடையே, அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ராஜசேகரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து கவர்னர் தமிழிசை நடவடிக்கை எடுத்துள்ளார்….