பினராய் விஜயன் பதவி விலகக் கோரி கடந்த 5 நாட்களாக கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து பினராய் விஜயனுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது வாகனத்துக்கு முன்னும், பின்னும் 20க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.நேற்று இவர் கோட்டயம், கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்கள் 1 மணி நேரத்திற்கு முன்பே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.பத்திரிகையாளர்களுக்கு கூட கருப்பு சட்டை மற்றும் கருப்பு முகக் கவசம் அணிய தடை விதிக்கப்பட்டது. கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது கருப்பு சுடிதார் அணிந்து வந்த 2 திருநங்கைகளை போலீசார் கைது செய்து ஜீப்பில் கொண்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் கடும் பாதுகாப்பையும் மீறி கோட்டயத்திலும், கொச்சியிலும் காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் பினராய் விஜயனுக்கு கருப்புக்கொடி காண்பித்தனர். கோட்டயத்திலும், கொச்சியிலும் பல மணி நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்….