புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் சீனா நமது நாட்டு நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதை மறுப்பதன் மூலமாக ஒன்றிய அரசு நாட்டுக்கு நம்பிக்கை துரோகம் இழைப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் சீனா ராணுவ உள்கட்டமைப்புக்களை உருவாக்கி உள்ளது. இது மிகுந்த எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் சீனாவின் நடவடிக்கை மிக வெளிப்படையாக உள்ளது. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஸ்திரமற்ற மற்றும் அழிவை உண்டாக்கக்கூடிய இந்த நடவடிக்கையால் எந்த பலனும் இல்லை என்று கருத்து தெரிவித்து இருந்தார். இது பற்றி வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘எல்லையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இந்தியா கவனமாக உற்றுநோக்கி வருகிறது. கிழக்கு லடாக்கில் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான தீர்வை அடுத்த கட்ட ராணுவ பேச்சுவார்த்தையில் எட்டுவதற்கு இந்தியாவுடன் இணைந்து சீனா இணைந்து செயல்படும்,’ என தெரிவித்தார். இதை விமர்சித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘லடாக் எல்லையில் ராணுவ உள்கட்டமைப்புக்களை உருவாக்குவதன் மூலமாக எதிர்கால பிரச்னைகளுக்கு சீனா அடித்தளமிடுகிறது. ஆனால், இதனை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதன் மூலமாக ஒன்றிய அரசு நாட்டுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கிறது,’ என கூறியுள்ளார்….