சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் உண்மை நிலையை அறிய உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, இலக்கியம் போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை சென்னை கேகே நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் திருமாவளவன் வெளியிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் உண்மை நிலையை அறிய தமிழக அரசு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆண்டுதோறும் அம்பேத்கர் சுடர் விருது உட்பட 6 விருதுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக கார்ல் மார்க்ஸ் பெயரிலும் விருது வழங்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்தார். முக்கியமான அம்பேத்கர் சுடர் விருது இந்த ஆண்டு கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். …