ஈரோடு: திங்களூர் அருகே தண்ணீர் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியாமல் உள்ள போலீஸ் குடியிருப்புகளை காவல்துறை வீட்டுவசதி நிர்வாக இயக்குநர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று ஆய்வு செய்தார். பெருந்துறை அடுத்துள்ள திங்களூர் மற்றும் சிறுவலூர் ஆகிய காவல்நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு கடந்த 2000ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை சார்பில் கோபி திங்களூர் சாலையில் 24 குடியிருப்புகள் கட்டப்பட்டது. குடியிருப்புகளில் தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படாததால் கடந்த 20 ஆண்டுகளாக போலீசார் குடியேற முடியாமல் குடியிருப்புகள் பயன்பாடு இல்லாமல் உள்ளது. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட குடியிருப்புகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மாவட்ட காவல்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 31ம் தேதி தினகரன் நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இச்செய்தியின் எதிரொலியாக தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான ஏ.கே. விஸ்வநாதன் நேற்று முன்தினம் நேரில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் குடியிருப்புகளை ஆய்வு செய்தார். குடியிருப்பு கட்டிடம் மற்றும் கதவு, ஜன்னல்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ததோடு, கட்டிடத்தில் ஆங்காங்கே பழுதடைந்து கிடப்பதையும் பார்வையிட்டார். மேலும் குடியிருப்பு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைப்பது அல்லது உள்ளாட்சி அமைப்பு மூலம் தண்ணீர் வசதியை உருவாக்குவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்….