சென்னை: தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க மாநில அளவில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓராண்டில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் குழு அறிக்கை அளிக்கும். தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகத்தில் புதிதாக கல்விக் கொள்கையை இக்குழு உருவாக்குகிறது. தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் பல்வேறு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு, ஒரு வருடத்தில் கல்வி கொள்கையை வடிவமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….