சித்தூர்: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த பாலதிரிபுரசுந்தரி கோயில் அருகே ஐபிஎல் டி-20 கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக இரண்டாவது காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் டி-20 இறுதிப்போட்டியில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் எந்த அணி வெற்றி பெறும் என தீர்மானித்து அந்த அணிகள் மீது பணத்தை கட்டி விளையாடியுள்ளனர். மதன்குமார் என்பவரின் தலைமையில் ஒரு குழு அமைத்து தினமும் பல்வேறு இடங்களில் இவ்வாறு சூதாட்டம் நடந்துள்ளது. அப்போது சூதாட்டத்தை நிர்வகிப்பதற்காக போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் தோல்வி அடைந்தவர்களிடம் இருந்து தலா ஆயிரம் ரூபாய்க்கு ரூ.100 கமிஷனாக மதன்குமார் பெற்றுள்ளார். இறுதிப் போட்டியன்று இரவு 8 மணிக்கு டாஸ் போட, ஓவருக்கு ஓவர் போட்டியாக பந்தயம் கட்டப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக சித்தூர் மிட்டூரை சேர்ந்த கே.மதன்குமார் (32), ஹாசிம்பாஷா (30), சித்தூரை சேர்ந்த செல்வா (40), பாபு உள்பட 13 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்….