சென்னை: சென்னை எழும்பூர் மருத்துவமனையில் 50 வயது பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.சென்னையை சேர்ந்தவர் ராதிகா(வயது 50). இவருக்கு திருமணமாகி 25 ஆண்டுகளாகியும் குழந்தையில்லை. இதனால் தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் முறையில் கருதரித்து, 7 மாதம் சிகிச்சை பெற்று வந்தார்.இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த ராதிகாவிற்கு பிரசவத்தில் ஒரு ஆண் ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. இதேபோல் வள்ளி(47) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்துள்ளது.இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் விஜயா கூறியதாவது:எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நவீன மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் முதல் முறையாக 50 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது சாதனைக்குரியது. ராதிகா மற்றும் இருவரும் தொடர்ந்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.மேலும் இவர்களுக்கு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனைகளைப் பெறப்பட்டு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையில் இருவரின் குழந்தைகளுக்கும் ரத்த ஓட்டம் சீராக இல்லை என தெரிந்தவுடன் நுரையீரல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தது.இதில் வள்ளிக்கு 29 வாரங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 900 கிராம் எடையுள்ள குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 900 கிராம் என்பதால் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. பிறகு தற்போது குழந்தையின் எடை 1.4 கிலோ வாக அதிகரித்து, தாயுடன் நலமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 900 கிராமில் பிறந்த குழந்தையை மிகவும் சிறப்பான சிகிச்சை மூலம் காப்பாற்றியதற்காக டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் பெற்றோர் நன்றியை தெரிவித்தனர்.சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 2021 ம் ஆண்டில் மட்டும் மொத்தமாக 13,851 பேருக்கு பிரசவம் செய்யப்பட்டது. இதில் 24 வயதுக்குட்பட்ட கர்ப்பிணி பெண்கள் 7124 பேருக்கும், 25-29 வயதுக்குட்பட்ட கர்ப்பிணி பெண்கள் 4469 பேருக்கும், 30-35 வயதுக்குட்பட்ட கர்ப்பிணி பெண்கள் 2258 பேருக்கும், 35-40 வயதுக்குட்பட்ட கர்ப்பிணி பெண்கள் 300 பேருக்கும், 40 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் 40 பேருக்கும் பிரசவம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது….