கேளம்பாக்கம்: கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர் எலீசா (45). திருமணம் ஆகாதவர். கேளம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியை. அதே பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு எலிசா செல்வது வழக்கம். இதையொட்டி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், தேவாலயத்தில் கேளம்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல் (38) என்பவருடன் எலிசாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து சாமுவேல், எலிசாவிடம் அடிக்கடி பணம் வாங்கியுள்ளார். அவருக்கு, மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த எலிசா, அவரை சந்திப்பதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று மாலை சாமுவேல், பள்ளி முடிந்ததும் ஆசிரியை எலீசாவை சந்திக்க அங்கு சென்றார். வெளியே வந்த எலீசா, அவரை சந்திப்பதை தவிர்ப்பதற்காக, மாதா கோயில் தெரு வழியாக கேளம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றார். இதையறிந்த சாமுவேல், தனது பைக்கில் வேகமாக சென்று, அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சாமுவேல், திடீரென எலீசாவை சரமாரியாக தாக்கி, அவரது செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.இதுகுறித்து எலீசா, கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சாமுவேலை தேடி வருகிறார். ஆசிரியையிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சாமுவேல் பாஜவின் செங்கல்பட்டு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது….