சென்னை : திருநெல்வேலியில், தாக்கப்பட்ட காவல் பெண் உதவி ஆய்வாளருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் செல்வி.மார்க்ரெட் தெரசா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஆறுமுகம் என்ற நபர், உதவி ஆய்வாளரைக் கத்தியால் வெட்டியதையடுத்து, அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைத் தாக்கிய ஆறுமுகம் என்ற நபர். காவல் துறையினரால் கைது. செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பெண் காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட செய்தியை அறிந்த. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இச்சம்பவத்தில் காயமுற்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் செல்வி. மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார் அதோடு மட்டுமல்லாமல். செல்வி. மார்க்ரெட் தெரசா அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதோடு, மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது….