புதுச்சேரி : புதுச்சேரியில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி நேற்று புதுச்சேரி வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையிலிருந்து மரப்பாலம் சந்திப்பு வரையிலான கடலூர் சாலையில் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.புதுச்சேரி தாசில்தார் ராஜேஷ்கண்ணா தலைமையில் நகராட்சி, பொதுப்பணித்துறை, காவல்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 9 பெட்டிக் கடைகள், விளம்பர தட்டிகள் ஆகியவை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அகற்றப்பட்டன. இதற்கு தெருவோர வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதை நிராகரித்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினர்.ஏற்கனவே வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக நோட்டீஸ் விநியோகித்திருந்த நிலையில் ஏஎப்டி மைதானம் அருகே இருந்த தேனீர், டிபன், காய்கறி, உணவு கடைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. இதையொட்டி உருளையன்பேட்ைட, முதலியார்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இதனால் புதுச்சேரி- கடலூர் சாலையில் பரபரப்பு நிலவியது. …