சென்னை: விபத்துகளை தவிர்க்கவும், எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்கவும் கனரக சரக்கு வாகனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வகுத்து அவற்றை சட்டமாக இயற்றிய ஒன்றிய அரசு அதனை கடந்த 2019ம் ஆண்டு அரசிதழிலும் வெளியிட்டது. ஒன்றிய அரசு சட்டத்தை தமிழக அரசு பின்பற்றுமாறு உத்தரவிடக் கோரிய கனரக சரக்கு வாகன தொழிலில் ஈடுபட்டுள்ள சென்னையை சேர்ந்த சுஜித் பிரபு துரை என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் பொதுநலனோ அல்லது தனிப்பட்ட நலனோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களோ இல்லை. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் பொதுநல மனுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்தவித ஆதாரங்களும் இன்றி மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆதாரங்களை சமர்ப்பிக்க 2 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டும் ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை மனுதாரர் 15 நாட்களுக்குள் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்….