சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலை மைய தடுப்புகள் மற்றும் போக்குவரத்து தீவுத்திட்டு பூங்காக்களை அழகாக பராமரிக்கும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டம் மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மரங்கள், செடிகள் மற்றும் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒருசில சாலை மைய தடுப்புகளில் மாநகராட்சியின் பண்ணையிலிருந்து செடிகள் கொண்டு வரப்பட்டு நடப்பட்டுள்ளன. அனைத்து மண்டலங்களிலும் சாலை மைய தடுப்புகளை பசுமையாக பராமரிக்க தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை பெறவும் நமக்கு நாமே திட்டத்தில் இந்த பணிகளை மேற்கொள்ளவும் மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சாலை மைய தடுப்புகளில் மரம், செடிகளை நட்டு பசுமையாக பராமரிக்க நமக்கு நாமே திட்டத்தில் பங்களிப்பை அளிக்க முன்வரும் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாலை மைய தடுப்புகளில் வைக்கப்படும் பலகைகளில் மூன்றில் இரண்டு பங்கு சென்னை மாநகராட்சியின் பெயரையும், மூன்றில் ஒரு பங்கு தங்கள் நிறுவனத்தின் பெயரையும் அமைத்துக்கொள்ளலாம். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை சாலை மைய தடுப்புகளில் அழகுபடுத்தும் பணிகள் மற்றும் பசுமையாக்கும் பணிகள் மேற்கொள்ள நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 8 தனியார் நிறுவனங்கள் ரூ.49.1 லட்சம் நிதி வழங்கியுள்ளன. மேலும் நெடுஞ்சாலைகளில் உள்ள சாலை மைய தடுப்புகளில் மரங்களை நடவு செய்து பசுமையாக பராமரிக்க சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஜவஹர்லால் நேரு 100 அடி சாலையில் நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து மரம், செடிகள் நடப்பட்டு அழகுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், அடையாறு மண்டலம் வேளச்சேரியில் வீராங்கல் ஓடை எதிரே உள்ள சாலை மைய தடுப்பில் நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து பசுமையாக பராமரிக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோயம்பேடு நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.82 லட்சம் மதிப்பில் மரங்கள், செடிகள், புல்தரைகள் மற்றும் செயற்கை நீரூற்றுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, சென்னை மாநகரை பசுமையாக அழகுடன் பராமரிக்க ஆர்வம் உள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நமக்கு நாமே திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் தங்களுடைய பங்களிப்பை அளிக்க முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….
நமக்கு நாமே திட்டம் மற்றும் சென்னை 2.0 திட்டத்தில் சென்னையை பசுமையாக பராமரிக்க ஆர்வமுள்ளவர்கள் பங்களிக்கலாம்
previous post