சென்னை: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் உள்ள அனைத்து ஒன்றிய பல்கலைக் கழகங்களிலும் கலை அறிவியல் உள்ளிட்ட இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை 2022-23ம் கல்வியாண்டு முதல் தேசிய தேர்வு முகமை நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும் என யுஜிசி அறிவித்துள்ளது. இத்தேர்வினை மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் ஏற்கலாம் எனவும் அறிவித்துள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தின் பாட முறையிலான இத்தேர்வு, மாநிலப் பாட முறையில் பயின்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சமமான வாய்ப்பினை வழங்காது. இதனால், தமிழக மாணவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இதுவரை நுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் அதில் சிறப்பாக பயின்று வெற்றிகரமாக பட்டம் பெற்று பயன்பெற்று வரும் நிலையில் அவர்கள் மீது நுழைவுத் தேர்வினை திணித்து தேவையற்ற பொருளாதார சுமையையும் மன அழுத்தத்தையும் ஏற்றும். எனவே, நுழைவுத் தேர்வு அறிவிப்பினை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …