செங்கல்பட்டு: சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ரவிசங்கர். இவரது மகன் லட்சுமணன் ஆதித்யா (15). சென்னை வேலம்மாள் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். ரவிசங்கர் தனது குடும்பத்துடன் செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள கன்னியம்மன் கோயிலில் வழிபாடு செய்ய நேற்று வந்தார். இந்நிலையில், ரவிசங்கர், லட்சுமணன் ஆதித்யா ஆகியோர் மொட்டை அடித்து கொண்டனர். பின்னர், லட்சுமணன் ஆதித்யா மட்டும் அருகில் உள்ள பாலாற்றில் குளிக்க சென்றான். அப்போது ஆற்று நீரில் சிக்கிய சிறுவன், நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்கி போராடினான். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள், ஆற்றில் குதித்து, சிறுவனை மீட்டு, உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே லட்சுமணன் ஆதித்யா இறந்துவிட்டதாக கூறினர். புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….