ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு நேற்று பகல் நேரங்களில் மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை நீடித்தது. இதனால், பனிப்பொழிவு சற்று குறைந்து காணப்பட்டது. அதன்பின், ஊட்டியில் உறைப்பனியின் தாக்கம் துவங்கி கடந்த மூன்று மாதங்களாக நீடித்தது. பொதுவாக மார்ச் மாதம் துவங்கினால், பனிப்பொழிவு முற்றிலும் குறைந்து காணப்படும். பகல் நேரங்களில் வெயில் அதிகமாக காணப்படும். இரவிலும் குளிர் குறைந்தே காணப்படும். ஆனால், இந்த ஆண்டு காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடந்த வாரம் வரை இரவு நேரங்களில் பனிப்பொழிவு காணப்பட்டது. தற்போதும் ஒரு சில சமயங்களில் அதிகாலை நேரங்களில் நீர் பனி காணப்படுகிறது. இதனால், அதிகாலை நேரங்களில் குளிர் அதிகமாக காணப்படுகிறது.இந்நிலையில், அந்தமான நிக்கோபார் பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால், மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதற்கு ஏற்றார்போல் கடந்த 2 நாட்களாக ஊட்டியில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் ஊட்டியில் வானம் மேக மூட்டத்தடன் காணப்பட்டது. பிற்பகல் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓரிரு நாட்கள் மழை பெய்தால், மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு பயன் அளிக்கும். அதேபோல், பனிப்பொழிவால் கருகிய தேயிலை செடிகளும் துளிர்க்க வாய்ப்புள்ளது. மேலும், நீர் நிலைகளிலும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், தற்போது பகல் நேரங்களில் உள்ள சூடு குறைந்து ரம்மியமான காலநிலை நிலவுவம் வாய்ப்புள்ளது. எனவே, மழை பெய்ய வேண்டி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பல இடங்களிலும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் தாழ்ழவான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் ஏடிசி பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது….