சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி அடிப்படையில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை பணியில் இருந்து நீக்கி விட்டு, அவுட்சோர்சிங் முறையில் தனியார் நிறுவனங்கள் மூலம் புதிய ஊழியர்களை நியமிக்க பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கதக்கது. அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவால் 400 ஊழியர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டால் தனியார் நிறுவனங்களும், இடைத்தரகர்களும் மட்டுமே பயன் அடைவார்கள். எனவே, வரும் காலங்களில் அவுட்சோர்சிங் முறையில் புதிய ஊழியர்களை நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் கூறினாலும், காலதாமதமின்றி விரைவில் அதனை அமல்படுத்த வேண்டும். …