திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் சிரமமின்றி செய்யும் பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 3ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி சென்னை இந்து சமய அறநிலைத்துறை ஆணையர், புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி இக்கோயிலில் பக்தர்களுக்கான கட்டண தரிசன வரிசை ரூ.250 மற்றும் ரூ.20 ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளன. ரூ.100 கட்டண தரிசன வரிசை மற்றும் பொது தரிசன வரிசை மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். மேலும் மகா மண்டபத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வரிசை முறை மாற்றி அமைக்கப்பட உள்ளது. அங்கு இரு வரிசையில் வரும் பக்தர்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே இடத்தில் இருந்து மூலவரை தரிசனம் செய்யும் வகையில் மாற்றப்பட உள்ளது. கோயிலில் கைங்கர்யம் செய்து வரும் திரிசுதந்திரர்கள், பக்தர்களை அழைத்துச் செல்லக் கூடாது என்ற அடிப்படையில் அடையாள அட்டை வழங்கப்படும். இந்நடை முறை இன்று (9ம் தேதி) முதல் 15 தினங்கள் சோதனை முறையில் அமல்படுத்தப்படும் என்று கோயில் இணை ஆணையர் (பொ) குமரதுரை தெரிவித்துள்ளார்….