சென்னை: ஒழுக்கத்தின் காரணமாக தலைமுடியை வெட்டச் சொன்ன தலைமை ஆசிரியரை மாணவர்கள் ஒன்று சேர்ந்து தாக்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் என்பதால், போலீசார் அவர்களை அழைத்து எச்சரித்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு அம்மை அம்மாள் தெரு பகுதியில் சென்னை உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமை ஆசிரியர் முஸ்தர்ஜான். இவர், நேற்றுமுன்தினம் மதியம் பள்ளி வகுப்பறையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது, 2 மாணவர்களின் தலை முடியளவு அதிகமாக இருந்துள்ளது. இதை பார்த்ததும் தலைமை ஆசிரியர், ‘‘படிக்கிற வயதில் தலைமுடியை வெட்டாமல் ரவுடிபோல் வந்தால் எப்படி. நாளைக்கு முடிவெட்டி விட்டுதான் பள்ளிக்கு வரவேண்டும்’ என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், தலைமை ஆசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புளியந்தோப்பு போலீசில் தலைமை ஆசிரியர் முஸ்தர் ஜான் புகார் கொடுத்தார். போலீசார், அந்த 2 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தனர். அப்போது, தன்னை தாக்கிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இதனால் மாணவர்களை அழைத்த போலீசார் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் கல்வி பாழாகும் என்பதாலேயே எச்சரித்து அனுப்புகிறோம் என்றனர். மேலும் இளைய தலைமுறை மாணவர்கள் ஒழுக்கமாக பள்ளிக்கு வர வேண்டும் என்பதையே மறந்து, அதை சீராக்க முனைந்த ஆசிரியரையே தாக்க முனைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….