ஹோஷியார்பூர்: வேலைவாய்ப்பு பிரச்னை, கருப்பு பணம் குறித்து தேர்தல் பிரசாரத்தில் மோடி பேசுவது இல்லை என்று ராகுல் காந்தி கூறினார். பஞ்சாப்பில் உள்ள ஹோஷியார்பூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் இரண்டு, மூன்று கோடீஸ்வரர்கள் பலன் பெற்றனர். பண மதிப்பிழப்பின்போது, கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்றார். சிறு வணிகர்கள், விவசாயிகளின் பாக்கெட்டில் இருந்து எடுத்த பணத்தை மூன்று கோடீஸ்வரர்களிடம் கொடுத்து விட்டார். நாட்டு மக்களின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்றும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என பேசினார். இதில் ஏதாவது உங்களுக்கு கிடைத்ததா? இப்போதெல்லாம் வேலைவாய்ப்பு பிரச்னை, கருப்பு பணம் பற்றி மோடி பேசுவதே கிடையாது’’ என்றார். முன்னதாக ராகுல் தனது டிவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில் ரூ.5.3 லட்சம் கோடிக்கு வங்கி மோசடிகள் நடந்துள்ளன. விடுதலைக்கு பின் மிக பெரிய வங்கி மோசடிகள், மோடியின் ஆட்சியின் கீழ் நடந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். …